பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பயணம்

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டனை நோக்கிய பயணத்தை நேற்று துவக்கியது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது.இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.

ராணியின் இறுதி சடங்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் வரும் 19ல்நடக்கிறது.அதன்பின், லண்டனுக்கு வெளியே விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்பட உள்ளது.

இரங்கல் தீர்மானம்

இறுதி சடங்கு உள்ளிட்ட அரச குடும்பத்து சம்பிரதாயங்களை பகிங்ஹாம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றனர். முன்னதாக, விண்ட்ஸர்அரண்மனையின் வாயிலில் வைக்கப்பட்டு இருந்துஆயிரக்கணக்கான மலர்கள் மற்றும் இரங்கல் செய்திகளை, மன்னர் சார்லஸின் மகன்களான இளவரசர் வில்லியம் – கேட், ஹாரி – மேகன் மார்கெல் தம்பதியர்நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்களுடன் அவர்கள் உரையாடினர். அரச குடும்பத்து வழக்கப்படி, இறுதி சடங்குக்கு முன்னதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் மன்னர் சார்லஸ் நேரில் செல்ல உள்ளார். அவரது பயணம் குறித்த விபரங்களை பகிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்டது.ராணியின் மறைவு குறித்து பிரிட்டன் பார்லி.,யின் இரு சபைகளும் இன்று கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுகின்றன.

இதில் மன்னர் சார்லஸ், மனைவி கமிலாவுடன் பங்கேற்கிறார். அதன் பின் ஸ்காட்லாந்து செல்லும் சார்லஸ், அந்நாட்டு தலைவர் நிகோலா ஸ்டர்கானை சந்திக்கிறார். அதன் பின் நாளை வடக்கு அயர்லாந்து செல்லும் சார்லஸ், இந்த வார இறுதியில் வேல்ஸ் செல்கிறார்.ராணி எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இருந்து புறப்பட்டு, அந்நாட்டின் தலைநகரான எடின்பர்க் நகரில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது.

19ம் தேதி இறுதி சடங்கு

 

இங்கிருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டு எடின்பர்க் நகரில் உள்ள செயின்ட் கைல்ஸ் தேவாயலத்திற்கு வருகிறது. அங்கு நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.செயின்ட் கைல்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் ஸ்காட்லாந்து மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின், ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் வாயிலாக லண்டனுக்கு நாளை புறப்படுகிறது.

லண்டனில் உள்ள பகிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுவரப்படவுள்ள ராணியின் உடல், நாளை மறுநாள் வரை அங்கு வைக்கப்படும். நாளை மறுநாள் ஊர்வலமாக புறப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இறுதி சடங்கு நடக்கும்தினம் வரை, ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இருக்கும். வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE