புடின் போர் குற்றவாளி – தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது .

இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சி எம்.பி. லிண்ட்ஸே கிரஹம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்தனர். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பிற நாடுகள் உக்ரைன் மீதான ரஷியாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ம் திகதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்வின் புறநகர்களில் சண்டையிட்டு வந்த ரஷ்ய படைகள், தற்போது நகரின் மையப்பகுதியை நெருங்கி உள்ளன. நேற்று அதிகாலையில் 15 மாடி குடியிருப்பு கட்டடத்தை குண்டுவீசி தகர்த்த ரஷ்ய ராணுவம், கீவ்வில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையையும் அழித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE