நிபந்தனைகளை நிறைவேற்றினாலே IMF இன் நிதி

இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியம் இன்று வெளிப்படுத்திய ஒப்பந்தம் நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மட்டுமே என நிதியத்தின் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமது அமைப்புக்கு உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மட்டுமே, இந்த உடன்பாடு வெற்றியளிக்கும் என நாணய நிதியம் எச்சரிக்கை கலந்த பாணியில் கருத்துத் தெரிவித்துள்ளது.

 

சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இலங்கையருக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்க திடசங்கற்பம் பூண்டுள்ள தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சாட்சியம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உடனடியாகவே மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும் இன்றைய ஒப்பந்தம் ஒரு ஆரம்பப்படி மட்டுமே என நாணய நிதிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இன்று கொழும்பில் இரண்டு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட இந்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இனி வோஷிங்டனை தளமாகக் கொண்ட நிதியத்தின் தலைமை அங்கீகரிக்க வேண்டிய அதே சமகாலத்தில், இலங்கையும் தனது தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்தினாலே முழுமையான உதவி வரும் என்ற முன்னெச்சரிக்கை கருத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக பெரு நிறுவன வருமான வரி மற்றும் வற் எனப்படும் பெறுமதிசேர் வரி ஆகியன இன்னும் உயர்த்தப்படவேண்டும் எனவும், தனி நபருக்கான வருமான வரி உயர்வு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் புதிய உயர்வுகளை அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்கள் நான்கு வருடங்களுக்கு இடையில் மேற்கொள்ப்படவேண்டும் என்ற நிபந்தனை இதில் முக்கியமானதாகும்.

 

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் மீது அரசியல் ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாதெனவும் அதனை சுயாதீனமான இயங்க அனுதிக்கவேண்டும் என்ற கடப்பாடும் கோரப்பட்டுள்ளது.

 

இந்த விடயங்களில் இலங்கை சாதகமாக நடந்து கொண்டாலே முழுமையான உதவி நிதி நாணய நிதியத்திடம் இருந்து கிட்டும் என்ற விடயமும் இங்கு முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE