அமெரிக்காவில் செவிலியர்கள் பற்றாக்குறை

அமெரிக்காவில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு செவிலியர்களுக்கே பெரும்பான்மையான கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பணிச்சுமை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் பணியில் இருந்து விலகிவிட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் 40 ஆயிரம் செவிலியர்கள் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதை ஈடுகட்டுவதற்காக அமெரிக்க அரசு வெளிநாடுகளில் இருந்து செவிலியர்களை பணிக்கு அமர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.‘கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் செவிலியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மருத்துவமனைகளில் வேலையில் இருக்கும் செவிலியர்களும் பல்வேறு காரணங்களுக்காக பணியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து செவிலியர்களை வரவழைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம்.

இதற்காக அதிக செலவுகள் ஏற்படும் என்றாலும் செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. வழக்கமாக அமெரிக்க குடிமக்களின் உறவினர்களுக்கு மட்டுமே அதிக அளவில் கிரீன் கார்டுகள் வழங்கி வருகிறோம். இந்த முறை தகுதியான பணியாட்களுக்கு மட்டுமே வீசாக்கள், கிரீன் கார்டுகள் வழங்கப்படவுள்ளது. இந்த முறை 2 லட்சத்து 80 ஆயிரம் கிரீன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. இதில் செவிலியர்களுக்கே பெரும்பான்மையான கிரீன் கார்டுகள் வழங்கப்படும்’ என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE