
சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனாதிபதி அதனை நசுக்க முற்படுகின்றாரா என சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பேரவையின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்குமாறு கட்சிகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாற்றத்தை கோரும் குழுக்களுக்கு எதிராக, கடுமையான மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதென சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகப் பதவியேற்குமாறு பொதுமக்கள் கோரவில்லை. எனினும் அரசியலமைப்பு என்ற போர்வையில் எப்படியாவது அதிகாரத்தை பிடிப்பதையே ஜனாதிபதி விரும்புவதாக ஓமல்பே சோபித தேரர், குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.