தமிழில் வெளிவரும் மூன்றாவது ‘டைம் மிஷின்’ திரைப்படம் ‘கணம்’

டைம் மிஷின், டைம் டிராவல் என்றழைக்கப்படும் கடந்த காலத்திற்குச் செல்லும், எதிர்காலத்திற்குச் செல்லும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் ஹாலிவுட்டில் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், தமிழில் அதிகம் வந்ததில்லை.

2015ம் வருடத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஆர்யா, கருணாகரன், மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ படம் தான் தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் ‘டைம் மிஷின்’ திரைப்படம். தங்களுக்குக் கிடைத்த டைம் மிஷினை வைத்து நண்பர்களான விஷ்ணு விஷால், கருணாகரன் கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் சென்று வருவதை நகைச்சுவை கலந்து சொன்ன படம் இது.

அடுத்து 2016ம் ஆண்டில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ’24’. தமிழில் வெளிவந்த இரண்டாவது டைம் மிஷின் திரைப்படம். வாட்ச் வடிவில் உள்ள டைம் மிஷின். அதை வைத்து வில்லன் சூர்யா தன் வாழ்க்கையை மாற்றியமைக்க முயல, நாயகன் சூர்யா அதற்கு என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முந்தைய இரண்டு படங்களும் சுவாரசியமான கதையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லப்பட்ட படங்கள். ‘இன்று நேற்று நாளை’ நகைச்சுவைப் படமாகவும், ’24’ ஒரு பழி வாங்கும் ஆக்ஷன் படமாகவும் அமைந்தது.

அடுத்து நாளை வெளிவர உள்ள ‘கணம்’ படம் தமிழில் வெளிவரும் மூன்றாவது டைம் மிஷின் திரைப்படம். நாளை தெலுங்கிலும் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில், ஷர்வானந்த், அமலா, ரீது வர்மா, சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் தான் முதன்மை என்கிறார்கள். அறிவியல் கதையில் அம்மா சென்டிமென்ட்டா என ஆச்சரியப்படுபவர்களுக்கு ஒரு அழுத்தமான கதையை இயக்குனர் சொல்லியிருக்கிறார் என படத்தைப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE