
தியேட்டர்களில் படம் வெளிவராமல் ஓடிடியில் வருவது ஒரு முன்னணி நடிகருக்கு அவரது வளர்ச்சியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. அப்படி ஒரு நிலை தனுஷுக்கு இப்போது வந்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தனுஷே அதை விரும்ப மாட்டார் என்பதும் நிச்சயம்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து தனுஷ் ஹிந்தியில் நடித்த ‘அத்ராங்கி ரே’ படமும் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து அவர் தமிழில் நடித்துள்ள ‘மாறன்’ படமும் ஓடிடியில் வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்படி அடுத்தடுத்து ஓடிடியில் ஹாட்ரிக் அடிக்க உள்ளார் தனுஷ். ‘மாறன்’ படம் ஓடிடியில் வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள ‘தி கிரே மேன்’ படம் கூட ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது. இப்படி தனுஷின் நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வருவதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம்தான் தியேட்டர்களில் வெளியாக உள்ள படமாக அமையலாம். அந்தப் படம் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை தனுஷ் ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும்.