இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளும் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

கொழும்பு இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.

அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்ஸ்தானிகரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்ட பிரதமர் மோடிக்கான, மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இந்திய வெளிவிவகார ஜெய்சங்கருக்கு, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 ஆம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பில் மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்ட அதேவேளை, இந்தியாவின் ஒத்துழைப்பை விஸ்தரிப்பது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE