
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அங்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தனக்கில்லாத ஒரு வேலையினை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது ஆணைக்குழுவின் கடமை என தெரிவித்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஆணைக்குழு அவ்வாறே செயற்பட்டதாகவும், அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருக்கும் தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இவ்வாறான பொய்யான விளம்பரங்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.