
உக்ரேனில் ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் படங்களும் மேலதிக விபரங்களும் வெளியாகியுள்ளன.
உக்ரேன் பத்திரிகையாளர் மரியா ரமனென்கோ படங்களை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் அவர்களது நகங்கள் பிடுங்கப்பட்டன ரஸ்யர்களிற்காக வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உக்ரேன் பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஆறு ஆண்களும்; பெண்ணொருவரும் உக்ரைன் மீதான போர் ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்களிற்குமுன்னரேகல்வி தொழிலிற்காக உக்ரேன் வந்தனர் என தெரிவித்துள்ள உக்ரேன் பத்திரிகையாளர் சில நாட்கள் வரை ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்த குப்பியான்ஸ்கிலில் அவர்கள் வாடகைககு வீடு எடுத்து தங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள பகுதியில் மறைந்திருந்த இவர்கள் கார்கிவ்விலிருந்து உக்ரைனிற்கு தப்பியோட முயன்றனர் அவ்வேளை ரஷ்ய சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை கைதுசெய்த ரஷ்ய படையினர் கண்களை கட்டி அடையாளம் தெரியாத பகுதிக்கு கொண்டுசென்றனர். பின்னரே அது சில நாட்கள் வரை ஆக்கிரமிப்பிலிருந்த வொவ்சான்ஸ்க் என்பது தெரியவந்தது எனவும் உக்ரேன் பத்திரிகையாளர்ரமனென்கோ தெரிவித்துள்ளார்.
தங்கள் பகுதி விடுவிக்கப்பட்டதும் ஏழு இலங்கையர்களும் மீண்டும் கார்கிவிற்கு நடந்து செல்ல முயன்றனர்.
அவர்கள் ஹோட்டல் ஒன்றை சென்றடைந்ததும் அதன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டதுடன் பொலிஸாருக்கு தகவலை தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.