பாகிஸ்தானில் ஹிந்து கோவிலில் பொதுமக்களுக்கு அடைக்கலம்

பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள ஹிந்து கோவிலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உணவு அளித்து, அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘தி டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். முகாம்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமமும், வெள்ளத்தால் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பாபா மாதோதாஸ் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மேடான பகுதியில் உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பியுள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து தங்கும்படி, உள்ளூர் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அதையடுத்து, 300 பேர் இந்த கோவிலில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு கோவில் சார்பில் உணவும் அளிக்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோவிலில் அடைக்கலம் அளித்தது, ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஹிந்து கலாசாரத்தின் மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கத்தை காட்டுகிறது. இவ்வாறு அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE