கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

இந்த பரீட்சையானது, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகள் உரிய அடையாள ஆவணங்களுடன், காலை 7.45க்கு பரீட்சை மண்டபத்துக்கு பிரவேசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 279,141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

அதேநேரம், பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தமது பரீட்சைக்குரிய தினத்திற்கு முன்தினமே, மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசேட கொவிட் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு, அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் உரிய வகையில் வழங்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE