தண்ணீர் பருக வேண்டாம்: கனேடிய நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குடிநீர் தொடர்பில் கனடாவின் நுணாவுட் பிராந்திய நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நுணாவுட் பிராந்திய தலைநகரான இக்காலூயிட் நகர மக்களுக்கே குறிப்பாக குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குடிநீரில் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்களின் சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நகர மக்கள் கண்டிப்பாக இங்குள்ள குழாய் தண்ணீரை குடிக்கவோ சமையலுக்கோ பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இன்னொரு உத்தியோகப்பூர்வ தகவல் நகர நிர்வாகத்திடம் இருந்து வெளியாகும் வரையில் இந்த எச்சரிக்கை தொடரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, இந்த சூழலில் கொதிக்க வைத்த மற்றும் வடிகட்டப்பட்ட நீர் நுகர்வுக்கு பாதுகாப்பானது அல்ல எனவும் அறிவித்துள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்கள், சிறார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் குளிக்க வேண்டாம் அல்லது குழாய் நீரை குளிக்க பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்டவைகளுக்கு பெரியவர்கள் குழாய் நீரை பயன்படுத்தலாம் எனவும், ஆனால் குளிக்கும் போது தண்ணீரை முழுங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குழாய் நீரில் எரிபொருள் வாசனை இருப்பதாக எழுந்த பரவலான புகாரை அடுத்தே, நகர நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. மேலும், நகர மக்களின் தேவைக்கு ஏற்ப தண்ணீரை நிர்வாகமே விநியோகம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE