‛நானே வருவேன்’ கதை

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் நானே வருவேன். எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. நேற்று வெளியான படத்தின் டீசர் அதனை உறுதிப்படுத்தி உள்ளது. காட்டுக்குள் வசிக்கும் வேடனாக ஒரு தனுசும், அந்த காட்டுக்கு ஒரு பணி நிமித்தமாக குடும்பத்துடன் செல்லும் என்ஜினீயராக ஒரு தனுசும் தோன்றுகிறார்கள். இருவருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய தொடர்போ, அல்லது பூர்வஜென்ம பந்தமோ இருப்பதாக டீசர் காட்டுகிறது. இந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1966ம் ஆண்டு ‘யார் நீ’ என்ற படம் வெளிவந்தது. இந்த படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜெயலலிதா சந்தியா, மோகினி என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். இதில் ஒரு ஜெயலலிதா கொல்லப்பட்டு விட இன்னொரு ஜெயலிதாவுக்குள் அவர் புகுந்து ஜெய்சங்கர் உதவியோடு பழிவாங்குகிற மாதிரியான கதை.

அதில் பெண் கதாபாத்திரம் என்பதை இதில் ஆண் கதாபாத்திரமாக மாற்றி, கதை களத்தை காடாக மாற்றி செல்வராகவன் இந்த படத்தை உருவாக்கி இருப்பது டீசரின் மூலம் உணர முடிகிறது. அந்த படத்தில் இறந்துபோன ஜெயலலிதா பாடும் பாடல்தான் நானே வருவேன்… என்ற பாடல். இந்த பாடலைத்தான் செல்வராகவன் டைட்டிலாக வைத்துள்ளார்.

இதேப்போல் தாணு தயாரிப்பில் சுரேஷ் சந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‛ஆளவந்தான்’ படத்தையும் இந்த படத்தோடு ஒப்பிட்டு வருகின்றனர். அதிலும் இரண்டு கமல். ஒரு கமல் நெகட்டிவ் கலந்த வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தையும் நானே வருவேன் படத்தோடு ஒப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE