தெலுங்குப் படத்திற்கு சம்மதிப்பாரா ஏஆர் ரஹ்மான்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். 30 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் தனி முத்திரை பதித்தவர். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களுக்கு, குறிப்பாக முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழுக்குப் பிறகு ஹிந்தியில் தான் அதிகப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு மொழிகளில் தவிர வேறு இந்திய மொழிப் படங்களுக்கு ரஹ்மான் அதிகமாக இசையமைத்தது இல்லை. தெலுங்கில் ”சூப்பர் போலீஸ், கேங் மாஸ்டர், நீ மனசு நாக்கு தெலுசு, நானி, ஏ மாய சேசவே, கொமரம் புலி, சாஹசம் சுவாசகா சாகிப்போ” என பத்துக்கும் குறைவான படங்களுக்குத்தான் இதுவரை இசையமைத்துள்ளார். மலையாளத்தில் தற்போதுதான் ‘மலையன்குஞ்சு, ஆடுஜீவிதம்’ என இரண்டு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சிரஞ்சீவி நடித்து 2019ல் வெளிவந்த சரித்திரப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்கு முதலில் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்கான அறிமுக வீடியோ கூட வெளியானது. ஆனால், படத்திலிருந்து திடீரென விலகிவிட்டார் ரஹ்மான்.

தெலுங்கில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து ஐந்து வருடங்களாகிவிட்டது. தற்போது அவரை தன்னுடைய ‘ஜன கன மண’ படத்திற்கு இசையமைக்க வைக்க இயக்குனர் பூரி ஜகன்னாத் முயற்சி செய்து வருகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகத் தகவல். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

நாட்டுப்பற்றை மையமாக வைத்து உருவாக உள்ள ‘ஜன கன மண’ படம் பான்-இந்தியா படமாக வர உள்ளது. ரஹ்மான் இசை இருந்தால் படத்திற்கு சிறப்பாக இருக்கும் என இயக்குனர் பூரி ஜகன்னாத் விரும்புகிறாராம். அவரது ஆசையை ரஹ்மான் நிறைவேற்றுவாரா என்பது சீக்கிரமே தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE