நான் ‘தவளை அரசியல்’ செய்யமாட்டேன் – அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர ரீயும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என யாழ் மாவட்ட ஒருங்கிணைப் குழுவில் பிரதமரின் இணைப்பாளர் காசிலிங்கம் கீதநாத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம்பென்பது பிரதமரூடாக நேராக அணுக வேண்டிய பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகும். மாவட்டத்தின் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தும் முகமாக பிரதமரின் நேரடிப் பணிப்பின் கீழேயே இந்தப்பதவி எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் பலாபலன்களை வெகு விரைவில் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள் என தெரிவித்த அவர், எமது பணி செயலில் காட்டுவதேயன்றி வாய்வீச்சில் காட்டுவதல்ல என்றும் கூறினார்.

அத்துடன் பிரதமரின் பெயரையோ பிரதமர் அலுவலகத்தின் பெயரையோ ஒருபோதும் நான் துஷ்பிரயோகப்படுத்துவதில்லை என தெரிவித்த கீதநாத், பிரதமரின் தூர நோக்குத் திட்டங்களைச் செயலுருப்பெறச் செய்வதும் எமது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுமே தனது தலையாய கடமை எனவும் தெரிவித்தார்.

இதற்கு அரசியல் சாயம் பூசநினைப்பது அவரவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறெதுவும் இல்லை என கூறிய அவர், எனக்கு அரசியலுக்கு வரவேண்டிய எந்தவிதமான அவசியமுமோ விருப்பமோ அறவே இல்லை என்றும், அப்படியே அரசியலுக்கு வந்தாலும் நான் ‘தவளை அரசியல்’ செய்யமாட்டேன் எனவும் கூறினார்.

மேலும் அர்த்தமற்ற , நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் அளவுக்கு தம்மிடம் நேரமில்லை எனத் தெரிவித்த அவர், என்மீது குற்றம் சாட்டுபவர் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மாறிமாறி என்னைப் பற்றிப் பல்வேறு குற்றச் சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவருக்கு எனது வாழ்த்துகள்என்றும், யாழ்மாவட்ட பிரதமரின் இணைப்பாளர் காசிலிங்கம் கீதநாத் காட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE