குரலாக நடித்த கேபிஏசி லலிதா

மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான கேபிஏசி லலிதாவின் மறைவு மலையாள திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் லலிதாவுடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கேபிஏசி லலிதா குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் சுயம்வரம், மதிலுகள், நாலு பெண்கள், கொடியேற்றம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் மதிலுகள் படம் மட்டும் லலிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படம். அந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். அதேசமயம் அந்த படத்தில் அவர் குரல் மட்டும் தான் நடித்து இருந்ததே தவிர, அவர் திரையில் தோன்றவில்லை.

அதாவது கதைப்படி தனது வீட்டின் மதிலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வாலிபனுடன் தன் குரல் மூலம் பேசியே பழகுகிறார் ஒரு இளம்பெண். கடைசிவரை அவர் முகம் திரையில் காட்டப்படாது. இந்த கதாபாத்திரத்திற்காக குறிப்பாக அந்த குரலுக்காக பலரையும் ஆடிசன் செய்து பார்த்த அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் கேபிஏசி லலிதாவை அழைத்து இந்த கதாபாத்திரத்திற்கு யாராவது தெரிந்தவர் இருந்தால் சொல்லு என கேட்டுள்ளார்.

அப்படி அவர் மூலமாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பெண்கள் வந்து போயினர். கடைசியாக லலிதாவிடம் நீயே இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடு எனக்கூறி அவரை ஒப்பந்தம் செய்தாராம் அடூர் கோபாலகிருஷ்ணன். அந்த கதாபாத்திரத்திற்கு தன் குரல் மூலம் அழகாக உயிர் கொடுத்திருந்தார் லலிதா. மலையாள சினிமாவில் இன்றுவரை முக்கியமான படங்களில் ஒன்றாக இந்த மதிலுகள் திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE